ஞாயிறு, 21 நவம்பர், 2010

கவிஞர் கி.பாரதிதாசன்

கண்ணீர் கவிதை



ஆதிதமிழ் காக்கும் அருந்தொண்டில் முன்னின்று
பாதிவழி வந்து பறந்ததுமேன்? - நீதியோ?
மீதிவழி யானறியேன்! மீளாத் துயர்தந்து
சோதிவழி சென்றதுமேன் சொல்லு!

கம்பன் அழுகின்றான்! கன்னல் தமிழ்மகன்
செம்பொன் திருவடி சேர்ந்ததனால்! - அம்மம்மா!
நெஞ்சம் பொறுக்கலையே! நேயமொளிர் தேவனவன்
கொஞ்சம் பொறுக்கலையே கூர்ந்து!

இன்றுநான் பெற்றபுகழ்! ஈடிலா நற்றலைமை!
நின்றுநான் ஆள்வதும் நின்னருளே! - வன்பகையை
வென்றுநான் வாழ விரும்பி உழைத்தவுனை
என்றுநான் காண்பேன் இனி!

புன்னகை எங்கே? பொலியும் முகமெங்கே?
இன்னகை மின்னும் எழிலெங்கே? - நன்னுளம்முன்
பொன்னகை எங்கே? புலவன்நான் வாடுகிறேன்!
பன்னகை தாயே பகர்!

நீண்ட உருவம்!நேர் கொண்ட உயர்பார்வை!
ஆண்ட தமிழின் அழகுள்ளம்! - சான்றோர்போல்
தோண்ட சுரக்கும் சுடரறிவு! உள்ளுருகி
வேண்ட வருமா விரைந்து!

அன்பில் கனிந்த அருங்கனியே! செந்தமிழ்ப்
பண்பில் கனிந்த படருளமே! - வன்மையுடன்
துன்பில் புகுத்தி வெகுதூரம் போனதேன்?
என்றன் உறவை இழந்து!

பொன்னுடைந்து போகும்! பொருளுடைந்து போகும்!கூர்
வன்னுடைந்து போகும்! வளர்மதியே! - மென்கொடியே!
மண்ணுடைந்து போகும்! மரமுடைந்து போகும்!என்
கண்ணுடைந்து போனதே காண்!

வான்அழுத! வண்ண மலர்அழுத! துள்ளிவரும்
மான்அழுத! சூழ்ந்துள மண்ணழுத! - மீன்அழுத!
கான்அழுத! காற்றான கன்னித் தமிழழுத!
நான்அழுத! சென்றதேன் நாடு!


17.11.2010

0 உங்கள் எண்ணங்கள்: