ஞாயிறு, 21 நவம்பர், 2010

கவிஞர் வே. தேவராசு

நல்வழி  தருகவே!
அண்ணனின்  தோழனாய்  அன்றே  அறிமுகம்
அண்ணன் தம்பியாய்  அன்புடன் பழகினோம்
நடையில்  நின்றுயர்  நாயக ரே!நற்
படையை  நடத்திடப்  பறந்தீர்  மேற்றிசை
என்றினிக்  காண்போம்  என்றே இருந்தேன்
தென்றலாய்  உம்முகம்  தெரிந்திட  மகிழ்ந்தேன்!
நாற்ப  தாண்டுகள்  நகர்ந்த பின்னரே
ஏற்புடைத்  தலைவரே  இங்குமைக்  கண்டேன்!
புன்னகை  தவழும்  பூவிதழ்  திறந்து 
சொன்னவை யாவும்  சூத்திர  மாகும்!
நிமிர்ந்த  நன்னடை!  நேரிய  நோக்கு! 
திமிர்ந்த  தோள்கள் ! திண்ணிய  நெஞ்சம்! 
நீண்ட  கைகள்!  நெடிதுயர்  தோற்றம்!
ஆண்தகை  இவரென  அனைவரும் வியக்கும் 
பார்வையில் கண்ணியம்பார்ப்பவர்  யாவரும்
பார்வையால்  வணங்கிப்  பணிந்திடத்  தூண்டும் !
இணையராய்  நட்பு  இல்லமும்  சிறக்கத்
துணைவராய்  உம்முடன்  தொடர்ந்தே  நடந்தோம்
இறைப்பணி  தமிழ்ப்பணி  இரண்டையும்  கண்ணாய்
முறைப்படி  கண்டே  முன்வழி  காட்டினீர்!
நீவீர்  காட்டிய  நேர்வழி  எம்மின் 
ஆவிபோம் வரையில்  அழியவும் கூடுமோ?
வாரணம்  போலவே  வலம்வந்  தவரே!
காரணம்  இன்றியே  காலனும்  அழைத்திட
கையில்  உள்ளதைக்  கவர்ந்த பருந்தாய்
ஐயனே  உன்னரும்  ஆவி  பிரிந்ததே!
உள்ளம்  வேகுதே! உடலும்  நடுங்குதே!
வெள்ளம்  போல்கண் வெந்நீர்  பொழியதே!
உம்மரும்  துணைவி  உருகிடும்  மக்கள்
விம்மலைத்  தீர்த்திட வல்லார்  யாரே?
வானகத்  தில்நீவீர் வளரும்  சோதியாய்
ஞானம்  அளித்தே  நல்வழி  தருகவே!

0 உங்கள் எண்ணங்கள்: