வியாழன், 2 டிசம்பர், 2010

கவிஞர் பாமல்லன்

என் சிந்தை நிறைந்த சிமோன் 

சிமோன் பெயரே இனிது!
சிமோன் தோற்றம் பெரிது!
சிரித்த முகத்தில் சீரிய சிந்தை!
சரிந்த சீகை! சற்றிளம் கருமை!

கற்றுளம் தெளிந்த கல்வியின் வளமை!
முற்றுளம் நிறைந்த முழுஞானச் செழுமை!
கட்டிளம் உடலில் காந்தத்தின் வலிமை!
பட்டுளம் பதியும் பகர்மொழி இனிமை!

கை தொடும் போது குளிர்மை!
மெய்வழி ஏறும் புதுமை!
மை நிறமாம் கண்ணில் கருணை
செய்தவம் போன்றே யூறும்!

அரிதான பட்டத்தைப் பெரிதாக எண்ணாத
விரிவான உள்ளத்தின் வேந்தன் நீ!
இனிமை நல்லோர் இங்கிருக்க ஏனோ
தனிமை நாடியா நற்றவம் சென்றீர்!

முத்தமிழ் தன்னை முறையாய்க் கற்று
முக்தியில் காட்டவா முன்னம் சென்றீர்!
அத்தனை விரைவு உமக்கேன் அய்யா!

கலையா உறவுகள் உள்ளன என்றா
சிலையா படுத்து நித்திரை கொண்டீர்!
எத்தனை உறவும் நட்பும் உள்ளன
அத்தனை உமக்கு ஈடுதான் தருமோ?
பாழ்வினை வந்தே அழைக்கத்
தாழ்நிலை தந்தே சென்றீர்!

நாள் ஒன்றில் சந்திப்போம் நண்பா!
தோள் மீது கைபோட்டுக் கதைப்போம்!
கண்களை மூடினாலும் இமைத்திரையில்
மின்னொளி காட்சியில் வருவது உன்னுருவே!

பார்மீது கொண்ட வாழ்வு!
தேர்மீது சென்று முடியும்!
கார்போல மின்னும் வண்ணா!
தார்போல மணக்கும் மனத்துள்!

கொஞ்சத்தில் மறையாது
கொற்றவனே உன்நினைவு!
நெஞ்சத்தில் நிற்பாய்
நீடுலகு உள்ளவரை!
அரிதுயில் கொண்டாய்
அன்புக்கு உரியவரே
அழியாத புகழில் வாழ்வாய் என்றும்

0 உங்கள் எண்ணங்கள்: