வெள்ளி, 3 டிசம்பர், 2010

கவிஞர் கி. பாரதிதாசன்

மறப்பேனா....

எங்கே எங்கள் பொதுச்செயலர்?
    இறைவா உன்னை வெறுக்கின்றேன்!
இங்கே எங்கள் கவிக்கம்பன்
    ஏந்தும் துயருக் களவுண்டோ?
சங்கே முழங்கும் என்றோதித்
    தங்கத் தமிழைத் தரித்தவரைப்
பொங்கே என்று மனம்பொங்கப்
    புதைத்தல் சரியா? மறப்பேனா!

சிரித்த முகமும்! செழுங்கம்பன்
    சீரால் செழித்த நன்விழியும்
தரித்த தமிழால் புகழ்சூடித்
    தழைத்த தலையும்! நன்னெறிகள்
விரித்த மனமும்! நற்றொண்டால்
    விளைந்த வாழ்வும் போனதெங்கே?
எரித்த இடமாய் என்னிதயம்
    ஏகும் இன்னல்! மறப்பேனா

அன்பைப் பொழிந்த அகமெங்கே?
அறிவைச் சுரந்த அழகெங்கே?
பண்பைப் பகன்ற உருவெங்கே?
பயனைப் படைத்த செயலெங்கே?
துன்பைக் கொடுத்து வெகுதூரம்
தூயோன் சென்ற இடமெங்கே?
என்..பைக் கூட்டில் நிறைந்துள்ள
எழிலே! தமிழே! மறப்பேனா!

அய்யா என்றே எனையழைக்கும்
    அருமைத் தோழர்! இனிக்கின்ற
கொய்யாக் கனிபோல் நன்வலிமை
    கொடுத்த செயலர்! இவ்வுலகு
பொய்யா? வாழ்க்கை உதிர்இலையா?
    பொன்னும் மணியும் புதைபொருளா?
நெய்யாய் உருகும் என்னெஞ்சம்
    நேய சிமோனை மறப்பேனா!

துணையைப் பிரிந்து துடிக்கின்றார்?
    துயராம் கடலில் துவள்கின்றார்!
மனையைக் காக்க வழியென்ன?
    மனத்தைத் தேற்ற மொழியென்ன?
அணையைக் கட்டி உடைப்பாரோ?
    அழகுக் கலையை அழிப்பாரோ?
உனையே எண்ணி உன்ராசி
    உள்ளம் வாட! மறப்பேனா!

என்னோ(டு) இருந்து தமிழ்ஓங்க
    இரவும் பகலும் உழைத்திட்டார்!
கண்ணோ(டு) இருக்கும் மணிபோலக்
    கனிந்த நட்பே! கன்னமுதே!
விண்ணோ(டு) இருக்கும் நிலைகாண
    விரைந்து சென்ற செயல்சரியா?
மண்ணோ(டு) இருக்கும் உரமாக
    மனத்துள் உள்ளாய்! மறப்பேனா!

கம்பன் கழகம் சிறந்திடவே
    கடமை புரிந்த உனைமறவேன்!
எம்மின் நெஞ்சம் தெளிந்திடவே
    எடுத்துச் சொன்ன நெறிமறவேன்!
உம்மென்(று) இருந்தே இவ்வுலகை
    உணர்த்தும்! உயர்த்தும்! மதிமறவேன்!
செம்பொன் அடியைச் சேர்ந்தாலும்
    செந்சொல் சிமோனே! மறவேனா!

எழுதிக் கொடுத்த மடலிருக்க!
    இனிது கொடுத்த பொருளிருக்க!
உழுது கொடுத்த உழவன்போல்
    உழைத்துக் கொடுத்த உயர்விருக்க!
விழுது கொடுத்த வன்மையைப்போல்
    வெல்லும் கம்பன் உறவிருக்க!
அழுவைக் கொடுத்த இந்நாள்ஏன்?
    அடியேன் உன்னை மறப்பேனா?

12-12-2010

0 உங்கள் எண்ணங்கள்: