சனி, 20 நவம்பர், 2010

கவிஞர் லினோதினி சண்முகநாதன்

அழிவினைக் காண்பதில்லை!

ஆறுபோல் பரந்து ஓடும்
அன்புள்ளம் கொண்ட ஐயா! - நின்
வீறுகொள் நடை தானெங்கே?
விரைந்து நீ சென்றதெங்கே?

காரிருள் சூழ்ந்து வானம்
கௌவிய இருளை நீக்கி
ஞாயிறைக் காணு முன்னே
ஞாலனே! மறைந்ததெங்கே?

அன்று நான் அரங்கிலேறி
ஆக்கிய தமிழ்ப் பாவெல்லாம்
மன்றிலே அமர்ந்து கேட்டு
மனமுவந்தாசி கூறிச்
சென்று வா என்றே - இருகரம்
சேர்த்தென்னை அனுப்பி வைத்தீர்!
சென்று நான் வந்தேனையா
செவாலியே! நீவீர் எங்கே?

இன்றும்மைப் பார்த்ததுபோல்
இளநகை புரியும் தோற்றம்!
நின்று என்னுள்ளத்துள்ளே
நீள்துயர் வளர்க்குதையா!

என்றினிக் காண்போம் என்றே
எண்ணிடும் போதில் நெஞ்சம்
கன்றினைப் போலே கதறிக்
கண்ணீரில் மூழ்குதையா!

அன்பிலே பிறந்த நெஞ்சம்
அன்பிலே வளர்ந்த நெஞ்சம்
அன்பையே அளித்த நெஞ்சம்
அழிவினைக் காண்பதில்லை!

என்பதால் இமையமே உம்மை - இனிக்
கண்களாற் காணோமெனினும், - எம்
கருத்திலே நிறைந்து என்றும்
எம்முடன் வாழ்கின்றீரே!

0 உங்கள் எண்ணங்கள்: