சனி, 20 நவம்பர், 2010

ஞானகத் தந்தை செர்மானுசு முத்து

இறையடி எய்திய இனிய நண்பர்
குறையிலாக் கோமான் செவாலியே சிமோன்
வானகத் தந்தை வாழ்த்தும் வண்ணம்
ஞானகத்துக் குழைத்தார் என்பது திண்ணம்!
இறைமகன் இயேசுவே இவர்க்குச் சமயம்
மறைதரும் வாழ்வில் மாபே ரிமயம்
கனியனைய மொழியாளர் கருணைமிகு விழியாளர்!
இனியகுணம் உடையாளர்! எதற்குமஞ்சாப் படையாளர்!
முதிராத மக்களிடமும் அதிராமல் பேசிடுவார்!
எதிராகப் பேசினாலும் அன்பையே வீசிடுவார்!
பாங்குடன் பணியாற்றிப் பிறர்நலம் பேணியவர்!
தீங்குடன் கெடுதல் நினைக்கவும் நாணியவர்!
நிமிர்ந்த நெஞ்சு நேர்பார்வை உளத்தூய்மை
திமிர்ந்த ஞானப் பெருக்கு இவர்சொத்து!
பொல்லாத சூதுவாது ஏதும் இல்லாதவர் !
பொல்லாங்கு எப்போதும் எவர்மீதும் சொல்லாதவர்!
பேருக்கோ புகழுக்கோ மார்தட்டும் வீம்புக்கோ
சீருக்கோ சிறப்புக்கோ உழைக்காமல் பரமன்
பேருக்கே அன்புவைத்து ஊருக்கே உழைத்தவர்!
என்றென்றும் எவர்பாலும் அன்பையே இழைத்தவர்!
காலத்தில் இவர்கரைந்து விட்டதாகக் கருதோம்
மூலவன் திருவடிகளில் முத்திபெற்று விட்டதனால் !
விழியோரம் விளைகின்ற வளமான முத்தெடுத்தோம்
கவியோரம் விளைகின்ற தமிழ்நூலால் தொடுத்தோம்!
புவிவாழும் காலம்வரை இவர்புகழ் வாழும்!
ஒளிமிக்க இறைவன் திருமுன்னர் இவரான்மா
ஒளிவீசி என்றென்றும் வாழ்கென வேண்டுவமே!

பிரிவுத் துயரால் வாடி நிற்கும்
ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
ஞானகப் பொறுப்பாளர்கள்
ஞானக மக்கள்
17.11.2010

0 உங்கள் எண்ணங்கள்: