வெள்ளி, 3 டிசம்பர், 2010

புலவர் இரெ. சண்முகவடிவேல்

அன்புள்ள கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களுக்கு வணக்கம்!

புதுவையிலிருந்து நண்பர் இராமசாமி அவர்கள், அருமை நண்பர் செவாலியே சிமோன் அவர்கள் மறைந்த செய்தியைத் தெரிவித்தார்கள். கம்பன் கழகம் அதன் தூண்களில் ஒன்றை இழந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். தொந்தரவு தராமல் உதவிகளை மட்டுமே செய்துவந்த உத்தமர் அவர். செய்தி கேட்டதிலிருந்து அவர் நினைவாகவே இருக்கிறேன்.

பிரான்சில் எத்தனையோ நண்பர்களைச் சந்தித்துப் பழகிடும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற சிலரில் தலையாயவர் சிமோன் அவர்கள்.

அவருடைய அமைதியான, அடக்கமான பேச்சும், எடுத்த பணியைச் செய்து முடிக்கும்வரை அயராமல் உழைக்கும் உழைப்பும், கண்ணியமிக்க  நடத்தையும், பிறரை மதிக்கும் உயர்ந்த நேசமும், புன்னகை தவழும் முகமும், கௌரவமாக அணிந்திருந்த உடையும், துணைவியாரை மதித்துப் போற்றும் மாண்பும், தமிழின்பால் கொண்டிருந்த பேரன்பும், பழகியவர்கள் மறக்க முடியாத வகையில் பழகிய பழக்கமும் என்றும் என் நெஞ்சில் பசுமரத்து ஆணிகளாகும்.

திருமதி இராசேசுவரி சிமோன் அவர்களின் ஆறாத் துயரில் பங்கு கொள்கிறேன், தாங்கவியலாத துன்பந்தான் என்றாலும், என்ன செய்வது தாங்கித்தானே ஆகவேண்டும். சிறிது சிறிதாக அம்மையார் அவர்கள் துன்பத்திலிருந்து தேறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.

அமரர் சிமோன் அவர்கள் இறையோடு இணைந்திருந்து திளைக்க எண்ணி நெஞ்ச அமைதி கொள்கிறேன்.

0 உங்கள் எண்ணங்கள்: