ஞாயிறு, 12 டிசம்பர், 2010

கவிஞர் அருணா செல்வம்

உன்னிகர் ஆகுமா ?
(பஃறொடை வெண்பா)

இரங்கல் கவிதை எழுதிவரச் சொன்னார்!
கரங்கள் நடுங்கின! காகிதத்தைக் கண்டே!
இறந்தார் எனப்பலர் சொன்னாலும் நெஞ்சம்
மறந்தால்.. உருவம் மறைந்தால்.. எழுதிடலாம்!
கண்ணுக்குள் வந்து கவிதையாய் நிற்கிறார்!
பொன்னுக்குள் முத்தெனப் பூவாய்ப்; பொலிகிறார்!
விண்ணுக்குள் மின்னிடும் விண்மீனின் புன்னகையும்
மண்ணுக்குள் போனதாய் மற்றவர்கள் சொன்னதைப்
பண்ணுக்குள் கேள்வி பலவாய்த்; தொடுத்திட
என்னுக்குள் வந்ததை ஏட்டில் எழுதினேன்!
முல்லைக் கொடியாள்! நிலவின் நிறமுடையாள்!
பிள்ளை மொழியாள்! பெருந்தமிழ்ப் பண்புடையாள்!
இல்லம் தனிலே உனைத்தேடி என்றென்றும்
உள்ளம் அழுவாள்! உருகித் தவிப்பாள்!
இதையேன் மறந்தாய்..நீ? எப்படிப் போனாய்?
அதையே நினைப்பவளுக்(கு) ஆறுதல் ஏது?
புதைக்குள் படுத்தாய்! புலம்பியே நெஞ்சம்
பதைப்பதைப் பாரும்! பறந்தாயே சொல்லாமல்!
யார்சொல்வார் ஆறுதல்? என்னவென்று சொல்வதோ?
ஊர்க்கூடி நின்றாலும் உன்னிகர் ஆகுமா?
கம்பன் கழகம் கவலையில் ஆழ்ந்தது!
நண்பன் இழப்பால் நகுதல் இழந்தது!
புன்னகை பூமுகம் மண்ணில் புதைந்திட
அன்னியம் ஆனதே! ஐயகோ.. என்னயிது?
கண்ணியம் மிக்க கலைஞர்கள் சேர்ந்த..நல்
புண்ணியம் மிக்க தமிழ்ச்;சேவை! உன்தன்
உழைப்பால் உயர்ந்ததை ஊர்பார்த்து மெச்சத்
தழைத்து நிழல்தரும் வேளையில் சற்றுநேரம்
நில்லாமல் போனதேன்? நீபோனாய்! நிம்மதியும்
இல்லாமல் போனதையா இங்கு!


11.12.2010

0 உங்கள் எண்ணங்கள்: