வெள்ளி, 3 டிசம்பர், 2010

குணா பாரதிதாசன்

என்றும் எங்களுடன்...

15.01.2011 காலை 10-30 மணி
இவ்வாண்டின் முதல்
செயற்கூட்டம்!

10-00 மணியிலிருந்து
உங்கள் வருகையை
எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!
சன்னல் வழியாக
அடிக்கடி எட்டிப் பார்க்கிறேன்!

10.20க்கு உங்கள் மகிழுந்து (கார்)
என் வீட்டு வாசலில் நிற்கிறது!

நீங்களும்
உங்கள் துணைவியாரும்
ஐயா தேவராசும்
அவர்தம் துணைவியாரும்
மாடிக்கு வருகின்றீர்!

சீமோன் ஐயா
வந்துவிட்டார் என்று
என் கணவரிடம் சொல்கிறேன்!

அமைதி கமழும் முகம்!
அன்பு கமழும் அகம்!
மலர்ந்தும் மலராத மலர்போல்
மணக்கும் புன்னகை!
இவை மூன்றும் உங்கள் அடையாளம்!

நான்தரும் தேனீர்!
வான்தரும் அமுதமென - என்
ஊன்உருகச் சூட்டும் புகழ்ச்சரம்!

தமிழ்த்தாய் வாழ்த்துடன்
செயற்கூட்டம் தொடரும்!
வெட்டியும் ஒட்டியும்
சிந்தனைகள் சிறப்புறும்!

என் கணவர்
வேகமாகவும் கோபமாகவும்
பேசும் பொழுது
பொறுமை யூட்டிப்
பெருமை யளிப்பீர்!
அருமை உணர்த்தி
அவையைக் காப்பீர்!

மதிய உணவு!
நான் சமைக்கும் காரக் குழம்பு
உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!
சாப்பிட்டு முடித்த பின்னும்
கைகளில் வாசம் அடிக்கும்!
உங்களின் பாராட்டுரை!

காலையில் வந்த நீங்கள்
இரவுவரை கழகப் பணிகளைச்
செய்து முடித்து
வீட்டுக்குப் புறப்படுவீர்!

எழுத்துப்பணி - கழகம்
இயங்கும் பணி எல்லாம்
உங்களையே சார்ந்திருந்தன!

இலக்கண வகுப்பிற்காக
ஆணியடித்துக்
கரும்பலகை மாட்டியது!

வீட்டுவேலை ஒன்றும் செய்யாமல்
செந்தமிழ் இனிக்கப்
பாட்டுவேலையும்
தமிழர் சிறக்க
நாட்டுவேலையும் பார்க்கும்
என் கணவர்
குளியல் அறை விளக்கை
இம்மாதமும் மாற்றவில்லை!
நீங்கள் புதிய விளக்கு
வாங்கிவந்து மாற்றியது!

கம்பன் விழாவிற்குப்
பொருட்களை ஏற்றிச் செல்லவும்
எங்களை அழைத்துச் செல்லவும்
பெரிய மகிழுந்து வாங்கியது!

ஆம் அடுத்த வாரம்
கம்பன் கழகத்தின் பொங்கல் விழா!
பொருட்களை ஏற்றிச் செல்லவும்
எங்களை அழைத்துச் செல்லவும்
உங்கள் மகிழுந்து
எங்கள் வீட்டு வாசலுக்கு வருமெனப்
பத்து மணியிலிருந்து
சன்னல் வழியாகப்
பார்த்துக்கொண்டிருப்பேன்!
காத்துக்கொண்டிருப்பேன்!

0 உங்கள் எண்ணங்கள்: